மகராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. இவர் தனது சகோதரர் மகன் நிரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கினார். கடந்த 2018-ல் இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்தது.
அதை தொடர்ந்து மெகுல் சோக்சி கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்த ஆண்டு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்துக்குச் சென்றார். இதற்கிடையே, இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று பெல்ஜியம் போலீசார் அவரை கடந்த ஏப்ரலில் கைது செய்தனர்.
அவரை நாடு கடத்த அக்டோபரில் பெல்ஜியம் ஐகோர்ட் அனுமதியளித்தது. இதை எதிர்த்து மெகு சோக்சி பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அவரது மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவரை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன.