மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) முடிந்து நேற்று முன்தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 10 சட்டசபை தொகுதிகளிலும் 3 லட்சத்து 80 ஆயிரத்து 474 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் அக்டோபர் 27-ம் தேதி அன்று வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கி நவம்பர் 4 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நடந்தது. அதன்பின் நவம்பர் 17-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டார். டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் ரங்கநாதன், ஆர்.டி.ஓ.,க்கள் கருணாகரன், சங்கீதா, தாசில்தார் இளமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் - 11 லட்சத்து 58 ஆயிரத்து 601 பேர், பெண்கள் - 12 லட்சத்து ஆயிரத்து 319 பேர், மூன்றாம் பாலினத்தவர் 237 பேர் என மொத்தம் 23 லட்சத்து 60 ஆயிரத்து 157 பேர் பட்டியலில் உள்ளனர். எஸ்.ஐ.ஆர்., பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.,க்கள் பணியாற்றினர். இவர்களின் களப்பணி மூலம் முகவரியில் இல்லாதவர்கள் 38 ஆயிரத்து 36, குடியிருப்பு மாறியோர் 2 லட்சத்து 36 ஆயிரத்து 68, இறந்தவர்கள் 94 ஆயிரத்து 432, இரட்டைப்பதிவு 11 ஆயிரத்து 336, மற்றவை 602 என 3 லட்சத்து 80 ஆயிரத்து 474 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச நீக்கமாக மதுரை மேற்கு தொகுதியில் 56 ஆயிரத்து 116 பேரும், குறைந்தபட்சமாக சோழவந்தான் தொகுதியில் 22 ஆயிரத்து 978 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜனவரி 18-ம் தேதி வரை பெயர்களை சேர்க்க, முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெற்றிடவும் மனு செய்து கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க (படிவம் 6), நீக்க (படிவம் 7), முகவரி மாற்றம் உட்பட திருத்தம் மேற்கொள்ள (படிவம் 8) பெற்று நேற்று முதல் மனு செய்யலாம். அப்படிவங்கள் முறையான விசாரணைக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 2026 பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.