சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் 2026 ஏப்ரல், மே மாதத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான நடைமுறை செயல்பாடுகள் துவங்கியுள்ளன. தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர்., பணிகளை செயல்படுத்தியது. சமீபத்தில் தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகளுக்கான பட்டியலை வெளியிட்டது. தற்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும், கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள், காந்திமியூசியத்தை அடுத்துள்ள தேர்தல் கமிஷன் கோடவுனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் இயங்கும் அளவு உள்ளனவா. பழுதடைந்துள்ளனவா என சரிபார்க்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.

இதில் தேர்தல் பார்வையாளர் சந்தீஷ்குமார் குப்தா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கநாதன், தாசில்தார் இளமுருகன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 6 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4600 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4500 வி.வி.பேட் இயந்திரங்களில் பதிவுகளை நீக்கியும், அதன் செயல்பாடுகளை இயக்கியும் சரிபார்த்தனர். பெங்களூரு பெல் நிறுவனத்தின் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர். ஒரு மாத காலம் இப்பணி நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.