சிவகாசியில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வரும் 12-ம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தமிழக பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம் 12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும் பலருக்கு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. அதை தொடர்ந்து அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது. அதை தொடர்ந்து நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விடுபட்ட பெண்கள் பெரும்பான்மையாக மனு அளித்தனர். இந்த விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்தனர். இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.