மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில், திறமையால் இங்கு மேனிலை சேர்வோம். தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்.

நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறோம். பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.

பாரதியாரின் நினைவுநாளினை மகாகவி நாள் எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.