அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வில் தன்னை சேர்க்க மறுப்பதால் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா? என்று ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு டெல்லி சென்றுள்ளார். மேலும் அங்கு ஓ.பன்னீர்செல்வம் விஷயம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. எந்த கூட்டணியில் சேருவது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் நாளை 15-ம் தேதியன்று நடத்த இருந்த மாவட்டச்செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை தற்போது ஒத்திவைத்துள்ளார். இந்த கூட்டத்தை அவர் வரும் 24-ம் தேதி அன்று எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.