பெரிய நிறுவனங்களுக்கு தாராளம் காட்டி விட்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை முறையற்ற ஜி.எஸ்.டி போன்றவற்றால் மத்திய அரசு கட்டிப்போட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைசிய சமூகத்தினருடனான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, எங்களின் தொழில் சரிவின் விளிம்பில் இருப்பதாக அவர்களின் வேதனைக் குரல் உண்மையில் என்னை உலுக்கி விட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிற்கு பெரும் பங்களித்த இந்த சமூகம், தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறது. இது ஒரு அபாயத்திற்கான எச்சரிக்கை மணி.
பெரிய, பெரிய நிறுவனங்களுக்கு தாராளம் காட்டி விட்டு, சிறு,குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை முறையற்ற ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்த அரசு கட்டிப்போட்டுள்ளது. இது வெறும் கொள்கை தோல்வி அல்ல. உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான நேரடி தாக்குதல். இது மன்னராட்சி எண்ணம் கொண்ட பா.ஜ.க. அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், நாட்டு வர்த்தகத்தின் முதுகெலும்பாக இருக்கும் வைசிய சமூக மக்களுக்கு துணை நிற்பேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.