கோவை: திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என சொல்லி தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் அடையாளத்தை அழிக்க துடிப்பது திமுகதான். டாக்டர் அம்பேத்கரால் தேசிய மொழியாக முன்மொழியப்பட்ட சமஸ்கிருதத்தை செத்த மொழி என அவமானப்படுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மீது அக்கறை இருப்பது போல நாடகமாடுகிறார்" என கூறியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.


கருணாநிதியின் பேரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதால் மட்டுமே திமுக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் பதவியை பெற்றவர் உதயநிதி. எந்தவித பின்னணியும் இல்லாமல் தனது உழைப்பு, அறிவாற்றல் தியாகத்தால் அரசியலில் யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தவர் பிரதமர் மோடி. அவரை விமர்சிக்க உதயநிதிக்கு எந்த உரிமையும் இல்லை.