தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முலான்பூரில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெரிய அளவிலான இலக்கை துரத்திய நிலையில் ஷுப்மன் கில்லும், சூர்யகுமார் யாதவும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இவர்கள் இருவரிடம் இருந்து சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த ஓராண்டு காலமாகவே பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான டென் டாஷேட் கூறியதாவது:
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் ஷுப்மன் கில்லின் மனநிலையில் சிறந்த மாற்றத்தை கண்டோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தற்போதைய டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் அவர், எளிதாக ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடுமாறு நாங்கள்தான் கூறியிருந்தோம்.
அந்த போட்டி நடைபெற்ற கட்டாக் ஆடுகளம் சிறப்பானது இல்லை. இதனால் அந்த ஆட்டத்தை விட்டுவிடலாம். 2-வது போட்டியில் ஷுப்மன் கில் சிறந்த பந்தில் ஆட்டமிழந்தார். பார்மில் தேக்கம் அடையும் போது இது நிகழும். கில்லின் பேட்டிங் தரம் எங்களுக்கு தெரியும். அவருடைய ஐபிஎல் சாதனையைப் பார்த்தால் சீசனுக்கு 700 ரன்கள், 600 ரன்கள், 800 ரன்கள், 600 ரன்கள் என குவித்துள்ளார். அதனால் அவர், மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம். சூர்யகுமார் யாதவும், ஷுப்மன் கில்லும் சரியான நேரத்தில் மீண்டு வருவார்கள் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.