மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் மசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இரு வைகளிலும் நிறைவேதப்பட்டது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் இது அமலுக்கு வரும். மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கும், புதிய திட்டத்தில் ஏழைகளுக்கு பாதகமாக உள்ள அம்சங்களுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று முன்தினம் மசோதா தாக்கலின்போது எதிர்கட்சி எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா நடத்தினர்.

இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்காட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,

இந்த மசோதா மிகவும் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கப் போகிறது. ஏனென்றால், அசல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அது வடிவமைக்கப்பட்ட விதத்தின்படி அதில் 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், மிகவும் ஏழைகளாக இருந்து வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக, இது ஏழை மக்களுக்கு, குறிப்பாக எதுவுமற்றவர்களுக்கு உதவிய ஒரு நல்ல திட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது, இந்த மசோதாவின் புதிய வடிவத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஒதுக்கீட்டை இவ்வளவு குறைக்கும்போது, மாநிலங்களால் அதைச் சமாளிக்க முடியாது. இதன் பொருள், அந்தத் திட்டம் செயலிழந்து விடும், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே என்று தெரிவித்தார்.