கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி வந்து சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பஸ், லாரி இரண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக பஸ்சுக்குள் சிக்கி இருந்த பலரால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய சிலர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கர்நாடகாவின் சித்ரதுர்காவில் நடந்த பேருந்து தீ விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.