ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நகரில் கோயில் அருங்காட்சியகம் அமைக்க கடந்த வருடம் செப்டம்பர் 3-ல் மத்திய அரசு, உ.பி. அரசு மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக அயோத்தியின் மஞ்சா ஜம்தாரா கிராமத்தில் 25 ஏக்கர் நசுல் நிலம் 90 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தை சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாக கட்ட டாடா சன்ஸ் கூடுதல் நிலம் கோரியது. இதை ஏற்ற உ.பி. அரசு கூடுதலாக 27.102 ஏக்கர் சேர்த்து, மொத்தம் 52.102 ஏக்கர் நிலத்தை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை அளித்தது.
அயோத்தியை சர்வதேச கலாச்சார மற்றும் ஆன்மிக தலமாக மேம்படுத்தும் ஒரு பெரிய திட்டத்துக்கு முதல்வர் யோகி அரசு இதன்மூலம் அடித்தளம் அமைத்துள்ளது. டாடா சன்ஸ் தனது சிஎஸ்ஆர் நிதியைப் பயன்படுத்தி அதிநவீன முறையில் இந்த கோயில் அருங்காட்சியகத்தை உருவாக்கி, இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதன் மூலம் அயோத்திக்கு ஒரு புதிய கலாச்சார அடையாளம் கிடைப்பதுடன், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளது. இந்த திட்டம் அயோத்தியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.